Wednesday, 28 August 2013

Mr.தாய்மாமன்

ஒவ்வொருத்தருக்கும் தங்களோட அம்மா வீட்டு சொந்தத்தை கலாய்ப்பதில் ஒரு மகிழ்ச்சி இருக்கும்  குறிப்பா தாய்மாமன கலாய்க்கிறது. என்ன மிஞ்சி போனா “கஞ்சன், கருமி, செலவு செய்யாதவர், எப்போ பார்த்தாலும் கைல காசு இல்லைன்னு சொல்றார் “இப்படிதான் கலாய்ப்பாங்க., அப்படிதாங்க என் தாய்மாமனும் ஆனால் அதை கொஞ்சம் வித்தியாசமான முறையில் யோசிச்சு செய்யக்கூடிய மூளைக்காரர்.
 
எப்படின்னா, நண்பர்களோட எங்கேயாவது வெளில கிளம்பும்போது சட்டை பாக்கெட்ல ஒரு 100 ரூபாய் நோட்டை மட்டும் எடுத்து வைத்துக்கொள்வார் கூடவே ஒரு தேளையையும் எடுத்து சட்டை பாக்கெட்ல போட்டுக்கொள்வார்.  தேள் எதுக்குன்னு கேட்குறீங்களா? பாக்கெட்ல பணம் இருக்குன்னு வெளில தெரியனும் ஆனா செலவு செய்ய பணத்தை எடுத்தா தேள் கொட்டிடும் அதனால மறந்தும் பணத்தை எடுக்க மாட்டார்.
 
அதே மாதிரித்தான் ஏதாவது விஷேசத்துக்கு போனோம்னு வைங்க சாப்பாட்டு பந்தில எவ்வளவு கும்பல் இருந்தாலும் நமக்கு முன்னாடி போய் உட்கார்ந்து சாப்பிட்டுடுவார் (அந்த தொழில் ரகசியதை யாரும்  கண்டுபிடிக்க முடியாது)
 
இதுக்கும் மேல, இதையெல்லாம் சொல்லி கலாய்ச்சாலும் யாரையோ சொல்லுற மாதிரி  கண்டுக்காம இருப்பாங்க (குத்து மதிப்பா சொல்லனும்னா "எருமை மாட்டு மேல மழை பெய்த மாதிரி)  அதுதான் அவங்க ஸ்பெஸாலிட்டியே ..!
 
 

Friday, 5 July 2013

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க

விடுமுறையில் வீடிற்கு வந்த ஞாயிற்றுக்கிழமை சாயுங்காலம் மட்டும் மனதிற்குள் ஒரு சின்ன கவலை ஒட்டிக்கொள்ளும் “இரவு கிளம்பவேண்டுமே” என்றுதான், அன்றும் அப்படிதான் இருந்தது வேறு வழி இல்லையே.! ஊரிலிருந்து புறப்படுவதற்கு முன் தேவையான சில பொருட்களை வாங்க ஒரு சின்ன டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் உள்ளே நுழைந்தேன்.
 
பொருட்களை வாங்கி பில் போட்டுவிட்டு பில் அமௌன்ட்டை பார்த்தேன் 196 என இருந்தது. பில்லை வாங்கிக்கொண்டு கேஷியரிடம் சென்று இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை நீட்டினேன், அதை வாங்கிக்கொண்டு “ஒரு ரூபாய் சில்லறை இருந்தா கொடுங்க” என்றார். நானும் என்னிடமிருந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து நீட்டினேன் (5 ரூபாயா திருப்பி தருவார் போல) அதற்க்கு அவர் “சில்லறை இல்லைங்க அதான்” என்று சொல்லி ஒரு 5 ரூபாய் சாக்லேட்டை எடுத்து நீட்டினார். வேறு வழியின்றி வாங்கிகொண்டு வீட்டுக்கு வந்தேன் (ஃபேஸ்புக்ல இதை போட்டு நியாயம் கேட்பேன் என நினைத்துக்கொண்டு ‘கன்ஸ்யூமர் கோர்ட்ல போட்டு நியாயம் கேட்பேன்’ என்று சொன்னது அந்த காலம்).
 
அப்போ டிவில வந்த “என்னங்கடா இது.! உங்க ஆட்டைல புது ரகமா இருக்கு.!! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க” வசனம் நான் சொல்ல வேண்டிய வசனம் மாதிரியே இருந்துச்சு.

Friday, 21 June 2013

நல்லா கேட்குறாங்கய்யா டீட்டெயிலு

பக்கத்துக்கு வீட்டு அண்ணன் மகள் "மகதி" (Magathi)  செம சுட்டி, எடக்குமடக்கா கேள்வி கேட்கிறதுல ரொம்ப கெட்டிகாரி, கடந்த மாதம் ஊர் மாரியம்மன் திருவிழாவில் அவளுக்கு மொட்டையடிக்க அமராவதி ஆற்றுக்கு குடும்பத்தோடு சென்றிருந்தோம். மொட்டையடிக்கையில் அழாமல் இருக்க கடைவீதியில் கை நீட்டி கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்தோம். கடைசியில் அவள் வேலையை காட்ட ஆரம்பிச்சா மொட்டையடிக்க உட்காரமாட்டேன் என்று அழுது எனக்காக வாங்கிய (வடை போச்சே..)  இரண்டு “டெய்ரிமில்க்” சாக்லேட் கொடுத்து (இதற்குதான் ஆசைப்பட்டாய் பாலகுமாரி) சமாதானபடுத்தி ஒரு வழியாக மொட்டையடித்து கோவில் சென்று வீட்டுக்கு வந்தோம். அப்போ அவளுடைய தத்தா (அம்மாவின் அப்பா) வந்திருந்ததை  கண்ட அவள் அண்ணியிடம் “அம்மா தத்தா ஏன் பாதி தலை மட்டும் மொட்டை அடிச்சுட்டு வந்திருக்கார்?” என கேட்க, அங்கே இருந்தவர்கள் என்ன பதில் சொல்வதென தெரியாமல் இருக்க திரும்ப திரும்ப கேட்க ஆரம்பித்தாள். நான் இடையில் புகுந்து “அது ஒண்ணுமில்லை சாமி, உன்னை மாதிரியே தாத்தாவும் மொட்டை அடிச்சுக்க உட்காரமாட்டேன்ன்னு அடம் பிடிச்சார், அதுனால பாதிலயே எழுந்து வந்துட்டார்”னு சொல்லி சமாளித்தேன்.
 
எப்படியெல்லாம் யோசிச்சு கேட்குதுக..!!

Saturday, 1 June 2013

போய் சேருமிடம்

ஒருவர் அவசர அவசரமாக ஓடி வந்து ஆட்டோவில் ஏறி டிரைவரிடம் “கொஞ்சம் வேகமா போங்க” என்றார். ஆட்டோ டிரைவரோ “சரிங்க எங்க போகணும்” என்று கேட்க அதற்கு அவர் “அதெல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம், நான் எங்க போனா உனக்கென்ன? நீ வேகமா போ” என்றார். இப்படிதான் ஊர்ல நிறைய பேர் இதுதான் தங்களோட குறிக்கோள் அல்லது லட்சியம்ன்னு (சேருகிற இடம்) தெரியாமையே இருக்காங்க.

Monday, 27 May 2013

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்னை

உயர்திரு தொழில்நுட்ப பொறியாளர் அவர்களுக்கு,

நான் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தங்களுடைய நிறுவனத்தின்  சொகுசு கார் ஒன்றை வாங்கினேன், நல்ல திறன்,வேகம்,இடவசதி,மைலேஜ் என நான் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கிறது, என்னுடைய பிரச்சனை என்னவென்றால் நான் வாரக்கடைசியை கொண்டாட குடும்பத்துடன் எனது பண்ணை வீட்டிற்கு செல்வது வழக்கம், இரவில் சாப்பிட்டு முடித்தவுடன் அருகில் மலை மீது இருக்கும் கடைக்கு காரில் சென்று சாக்லேட் வாங்கி வருவேன். நான் ஒவ்வொரு முறையும் “ஒரு குறிப்பிட்ட வகை சாக்லேட்” வாங்கும் போது மட்டும் கார் ஸ்டார்ட் ஆக மறுக்கிறது வேறு எந்த வகை சாக்லேட் வாங்கினாலும் ஸ்டார்ட் ஆகிறது.

எனவே உங்களுடைய மெக்கானிக் குழுவை அனுப்பி என்னுடையை காரின் பழுதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

இப்படிக்கு

கார் உரிமையாளர்

மேலே உள்ள கடிதத்தை படித்ததும் நமக்கு தோன்றுவது “ஆட்டோ கண்ணாடிக்கும் வண்டி ஸ்டார்ட் ஆக மறுப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது” என்ற காமெடிதான் ஞாயபகத்திற்கு வரும்.
ஒரு பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் ஆண்டிற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்களையே தயாரிக்கும். இப்படிப்பட்ட நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவுக்கு வந்ததுதான் மேலே படித்த அந்த கடிதம். கடிதத்தை படித்த அந்த பொறியாளருக்கு கோவமாகவும் இருந்தது அதேசமையம் நகைச்சுவையாகவும் இருந்தது. என்னடா இப்படி கொஞ்சம் கூட லாஜிக் இல்லாம புகார் வந்திருக்கே என சலித்துகொண்டும் அதை கிடப்பில் போடாமல் (நல்லவேளை) மெக்கானிக் துறைக்கு அனுப்பினார்.

கடிதத்தை வாங்கிய மெக்கானிக் துறை பொறியாளருக்கும் அதே காமெடி ஞாயபகம் வந்தது “கண்ணாடிய திருப்பினா வண்டி ஓடும்னு சொன்னத விட இது புதுசா இல்ல இருக்கு”ன்னு நினைச்சிட்டு தன குழு உறுப்பினர் ஒருவரிடம் கடிதத்தை காட்டி அந்த காரை எடுத்துட்டு வந்து சர்வீஸ் செய்து அனுப்ப உத்தரவிட்டார். அந்த மெக்கானிக் அந்த கடிதத்தை வாங்கி படித்தார் உடனே தன் மேலதிகாரியான அந்த மெக்கானிக் துறை பொறியாளரிடம்  “சார் கண்டிப்பா நம்ம கார்ல ஏதோ பிரச்னை இருக்கு நாம அதை எப்படியாவது சரி பண்ணனும் எனக்கு அனுமதி கொடுங்க நான் நேர்ல போய் பார்த்துட்டு வர்றேன்” என கேட்க அவரோ சிரித்தபடி “என்ன?? அந்த கார் உரிமையாளர்தான் ஏதோ லாஜிக் இல்லாம கடிதம் போடுறார் அதை படிச்சிட்டு நீயும் இப்படி கேட்கிற” என கூறி வேண்டா வெறுப்பாக அனுமதியளித்தார்.

தனக்கு அனுமதி கிடைத்ததும் அந்த மெக்கானிக் நேராக அந்த கார் உரிமையாளரிடம் வந்து தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு, “இந்தமுறை நானும் உங்களுடன் வார விடுமுறைக்கு வருகிறேன், நாம் கூட இரண்டு நாட்கள் தங்க வேண்டும்” என்றார். “சரி போகலாம்” என்றதும் குடும்பத்துடன்  கிளம்பினார்கள்.

முதல் நாள் இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு சாக்லேட் வாங்க கிளம்பினார்கள். இருவரும் சென்று அந்த கடையில் எப்பொழுதும் வாங்கும் வகையை வாங்கி வந்து காரை ஸ்டார்ட் செய்தவுடன் ஸ்டார்ட் ஆனது, மறுநாளும் இதே மாதிரி இரவு சாப்பிட்டவுடன் சாக்லேட் வாங்க கிளம்பினார்கள் இந்தமுறை அந்த (கடிதத்தில்) குறிப்பிட்ட வகை சாக்லேட்டை வாங்கி வந்து காரை ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகவில்லை, இதை பார்த்த அந்த மெக்கானிக் அதிர்ச்சியானார். (தலைவர் படிக்காதவன்ல  சொல்ற மாதிரி “லட்சுமி ஸ்டார்ட் ஆகிடு”ன்னு கூட சொல்லி பார்த்தார் அப்பாவும் ஒன்னும் ஆகலை) அப்புறம் எப்படியோ ஒருவழியாக இன்ஜினை ஏதோ செய்து ஸ்டார்ட் செய்துவிட்டார். இரவில் அந்த மெக்கானிக் தூங்காமல் கடந்த இரண்டு நாட்களாக சாக்லேட் கடைக்கு சென்றுவந்த  நிகழ்வுகளையே திரும்ப திரும்ப யோசித்துக் கொண்டிருந்தார், பின் தூங்கி போனார். கலை எழுந்ததும் அந்த மெக்கானிக் பயங்கர உற்சாகமாக காணப்பட்டார் இதை கண்ட அந்த கார் உரிமையாளர் ‘இந்த பயலுக்கு என்ன ஆச்சு?’ என யோசித்துக்கொண்டிருக்கையில் அந்த மெக்கானிக் வந்து “சார், நாம இப்போ சாக்லேட் வாங்க  கடைக்கு போகலாம்” என்றதும் உடனே  கிளம்பினார்கள். கடைக்கு சென்று அந்த பிரச்சனைக்குரியதாக கருதப்படும் அந்த சாக்லேட்டை வாங்கினார்கள், வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தால் ஸ்டார் ஆனது. அந்த கார் உரிமையாளருக்கு பயங்கர சந்தோஷம் “எப்படி? என்ன ஆச்சு?” என கேட்க, “ஒன்றுமில்லை சார் சின்ன பிரச்சனை வண்டியை எடுத்துட்டு போய் இரண்டு வாரத்தில் சரிசெய்து கொடுக்கிறோம்” என கூறி வண்டியுடன் புறப்பட்டார்

நிறுவனத்திற்கு வந்தவுடன் தன் துறை பொறியாளரிடமும்,தொழில்நுட்ப பிரிவு பொறியாளரிடமும் பிரச்சனையை விளக்கினார். “அந்த காரின் உரிமையாளர் தன் வாரகடைசியை கொண்டாட மலைஅடிவாரத்திற்கு செல்கிறார் அங்கு குளிர் கிடையாது ஆனால் அவர் சாக்லேட் வாங்க மலைப்பகுதிக்கு செல்கிறார் அங்கு கடும் குளிர் நிலவுகிறது, இதனால் இஞ்சின் ஆயில் உறையவும், செல்ஃப் ஸ்டார்ட் தடைபடவும் அதிக வாய்ப்பு உள்ளது” என்று கூற அந்த மெக்கானிக் பொறியாளரோ “சரி நம் முக்கிய பிரச்சனையான அந்த சாக்லேட் மேட்டருக்கு வாங்க” அதற்கு அந்த மெக்கானிக் “பெரும்பாலும் கடைக்காரர்கள் எந்த பொருள் அதிக விற்பனையாகிறதோ அதை முன்னாடியே வைத்த்திருபர்கள் அதுபோல அவர் வாங்கும் அந்த குறிப்பிட்ட வகை சாக்லேட்டை (காரின் பிரச்சனைக்குரியது) மற்றவர்கள் அதிகம் விரும்புவது கிடையாது எனவே அந்த கடைக்காரர் குளிர்பதன பெட்டியின் அடியில் வைத்திருப்பார் எடுக்க சிறிது நேரமாகும் இந்த நேரத்தில் இஞ்சின் ஆயில் உறைகிறது, செல்ஃப் மோட்டாரும் பிரச்சனை செய்கிறது மற்ற வகையை வாங்கும்போது உடனே அவர் திரும்பி வந்துவிடுவதால் பிரச்னை ஏற்ப்படுவதில்லை” என கூறி தன்னுடைய விளக்கத்தை கூறினார். இதை கேட்டு ஆச்சர்யப்பட்ட அந்த மெக்கானிக் வல்லுனரும் தொழில்நுட்ப பொறியாளரும் பாராட்டி மகிழ்ந்தனர் மேலும் அந்த கம்பெனி இதற்குமுன்னர் தயாரித்த அத்தனை கார்களையும் திரும்ப பெற்று இந்த கோளாறு வராமல் சரிசெய்து கொடுத்தனர்.

“நிறைகளை நண்பர்களிடத்திலும் குறைகளை எங்களிடத்திலும் சொல்லுங்கள்”  என்பது எழுத்தளவில் இல்லாமல் எந்த புகார் வந்தாலும் அதற்கு தனிக்கவனம் செலுத்தி தீர்க்கவேண்டும். ஏனெனில்

“வாடிக்கையாளரே கடவுள்”

Friday, 24 May 2013

வெள்ளை வேஷ்டி சட்டை போட்டா அரசியல்வாதியா?

“மன்றம் வந்த தென்றலுக்கு” என்ற பாடலின் பின்னணி இசையை மட்டும் ஒலித்துகொண்டிருந்தது அந்த கேரளத்து பேக்கரியின் ஸ்பீக்கர்கள், அலுவலக நடப்புகள் சூழ அந்த கேரளா பேக்கரியில் அமர்ந்திருந்தோம். இந்த ட்ரீட் கொடுக்குற கலாச்சாரத யார் கண்டு பிடிச்சாங்கன்னு தெரியல, எது எதுக்குத்தான் ட்ரீட் கேட்கிறதுன்னு அளவேயில்லை புது ட்ரெஸ், புது ஹேன்ட் பேக், புது செல்போன் என எது வாங்கினாலும் உடனே ட்ரீட்ன்னு சொல்லிடுறாங்க. அன்று சக அலுவலர் ஒருவர் புது மொபைல் வாங்கியதற்கான ட்ரீட். அந்த பேக்கரியில் வெயிட்டர் கிடையாது தேவையானவற்றை ஆர்டர் செய்து நாமே வாங்கி சாப்பிட வேண்டும்(Self Service). அனைவரும் ஆர்டர் செய்வதில் மும்மரமாக இருந்தனர், நானோ ‘அடுத்தவங்க சாப்பிடுறத பார்த்து ஆர்டர் பண்ணி எவ்வளவு நாளைக்குத்தான் சாப்பிடுறது?’ நாமாக ஆர்டர் பண்ணலாம்னு மெனு கார்டை பார்த்து சாப்பிட வெஜ் ரோல் ஒன்றும் குடிக்க கிரீன் டீ (ட்விட்டர்ல அடிக்கடி கிரீன் டீக்கு மார்கெட்டிங் நடக்குது அப்படி என்னதான் இருக்கும்ன்னு பார்க்கலாம்னு) ஆர்டர் செய்துவிட்டு சக அலுவலர்கள் சிலரின் வருகைக்காக காத்திருந்தோம். “மாலை மங்கும் நேரம்,இளையராஜா மெல்லிசை வித் கிரீன் டீ” என ஸ்டேட்டஸ் அப்டேட் போடலாம்ன்னு நினைச்சிட்டு இருந்தேன்.

அந்த நேரத்தில் பேக்கரி முன்னாடி பெரிய வெள்ளை கலர் கார் ஒன்று வந்து நின்றது (சினிமால ரவுடிங்க வருவாங்களே அது மாதிரி கார் – ஸ்கார்பியோ). அந்த காரிலிருந்த இறங்கியவரை பார்த்ததும் யூகித்தேன் அவர் ஒரு அரசியல்வாதியென, வெள்ளை சட்டை, கட்சி கரை போட்ட வெள்ளை வேஷ்டி அணிந்தவர் கூட மனைவி மகன்கள் இருவரோடு குடும்ப சகிதமாக இறங்கி பேக்கரியின் உள்ளே வந்து அமர்ந்தனர். வந்தவரோ தன் மனைவியிடம் “என்ன வேணுமோ சாப்புடுங்க எனக்கு ஒரு டீ மட்டும் போதும்” என கூறி பேக்கரியில் இருந்த ஒருவரை “டேய் தம்பி இங்க வாடா” என அழைத்தார் அந்த நபர் வந்ததும் “சூடா என்னடா இருக்கு?” என்றார் அதற்க்கு மெனு கார்டை எடுத்து நீட்டி “டேபிள் சர்வீஸ் கிடையாது சார், என்ன வேணுமோ அதை நீங்களே ஆர்டர் செய்து வாங்கிக்கணும்” (என மலயாளத்தில் கூறினார்) இதை கேட்ட அரசியல்வாதி “அதெல்லாம் முடியாது, நாங்க கேட்கிறதை கொண்டு வா போடா” என்றார்.

அந்த நபரோ பேக்கரி மேனேஜரிடம் சென்று விளக்கினார், அவரும் சர்வீஸ் செய்ய சொல்ல, திரும்பி வந்து என்ன வேணும் என்று கேட்டார் அதற்க்கு அவர் நக்கலாக சிரித்தபடி “அவங்களுக்கு என்ன வேனும்னு கேளு எனக்கு ஒரு டீ சர்க்கரை கம்மியா போட்டு எடுத்துட்டு வாடா” என்றார் சரி என அவர்களிடம் ஆர்டர் கேட்டு சென்றார், ஆர்டர் செய்தவற்றை எடுத்து வர சிறிது நேரம் ஆனது அதற்க்கு “டேய் டீ சொல்லி எவ்வளவு நேரம்டா ஆச்சு, சீக்கிரம் வாடா” என மரியாதையில்லாமல் சத்தமாக பேசினார். அந்த பேக்கரி நபரோ டீ மற்றும் அவர்கள் ஆர்டர் செய்ததை கொண்டுவந்து வைத்துவிட்டு மலயாளத்தில் “சார் நீங்க பேசுறது சரியில்லை..!”என்றார். அதற்க்கு அவரோ “என்னடா சொல்லுற?” என்று கேட்டு முடிப்பதற்குள் அந்த நபர் சென்றுவிட்டார். அரசியல்வாதி திரும்ப ”டேய், பில் எவ்வளவு ஆச்சு கொண்டாடா நேரமாச்சு” என மறுபடியும் சத்தமாக கூறினார். அந்த பேக்கரி நபர் பில் கொடுத்துவிட்டு மறுபடியும் மலயாளத்தில் “சார் நீங்க பேசுறது சரியில்லை..!” என்றார். அந்த அரசியல்வாதி கோவமாக அவர் சட்டையி பிடிச்சு “ஏண்டா, யார்ருகிட்ட வந்து என்ன பேசுற நான் யாரு தெரியுமா, கட்சில நான் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா” என கூறி அடிக்க போனார். (“என்னை பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட?”ன்னு கவுண்டமணி அடிக்க போற மாதிரியே போனார்) உடனே பேக்கரி ஊழியர்கள் அனைவரும் அந்த அரசியல்வாதியிடம் சண்டைக்கு வந்தனர்.

இதை பார்த்த எனக்கு ஒன்றும் புரியவில்லை, அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்து சமாதானப்படுத்தி என்ன பிரச்னை என கேட்டனர் அதற்க்கு அவர் அவனுக்கு எவ்வளவு தைரியமிருந்தால் திரும்ப திரும்ப “என் சம்சாரம் சரியில்லைன்னு” சொல்லுவான் என்றார். இதைகேட்ட அருகில் இருந்தவர்களில் ஒருவர் “சார் அவர் மலையாளத்துல சொல்லிருக்கார், மலயாளத்துல ‘சம்சாரம்’ன்னா ‘பேச்சு’ன்னு அர்த்தம், நீங்க அவரை  மரியாதையில்லாம பேசினீங்க அதான் அவர் உங்க பேச்சு சரியில்லைன்னு சொல்லிருக்கார்” என விளக்கினார். இதை கேட்ட அந்த அரசியல்வாதி பில் பணத்தை கொடுத்துவிட்டு மீதி சில்லரை(செம பல்பு) வாங்கிகொண்டு குடும்பத்துடன் ஓட்டமும் நடையுமாக வெளியேறினார்.

அப்போத்தான் தெரிஞ்சுது சிலருக்கு ‘கட்சி கரை வேஷ்டி,வெள்ளை சட்டை போட்டா அரசியல் தலைவர் ஆன நினைப்பு வந்திடும் போல’ன்னு, ஒரு சிலர் அரசியல்வாதி என்ற பெயரில் செய்யும் தவறுகளுக்காக அத்தனை அரசியல்வாதிகளுக்கும் கெட்ட பெயர்.மேலும் பதவி ஒருபோதும் ஒருவரை  பெரியமனிதன் ஆக்காது, நாம் பெரிய மனிதராகவேண்டுமானால் நமக்கு முதலில் பணிவுதான் தேவை.


இதைத்தான் அழகாக வள்ளுவர்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து

என கூறியிருக்கிறார்.

இவ்வளவு சொல்லிட்டு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் உண்மையாவே கிரீன் டீ பிரமாதம் :)   

Thursday, 23 May 2013

பக்கோடாக்களும் குட்டிமணிகளும்

ஃபேஸ்புக் சேட்டில் நண்பர் ஒருவருடன் நடந்த சின்ன உரையாடல்

நண்பர்:  டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி 'க்கு ஃபிரண்டு ரெக்வஸ்ட் குடுத்தா "This person can't accept new friend requests, but you are now following them " வருதே,ஏன் ?

நான் : அவர் பெரிய பிரபலம் 5000க்கும் மேல ஃபிரண்ட்ஸ் இருக்காங்க 10000க்கும் மேல பாலோவர்ஸ் அதுனால தான்

நண்பர் : டிமிட்ரி பிரபலம் ஆனா அளவுக்கு நீங்க ஏன் பிரபலம் ஆகல?

(அப்போ எனக்கு ஒரு காமெடி
...ஞாபகம் வந்தது, உடனே )

நான் : நானெல்லாம் என்ன ஒரு 6 மாசமாத்தான் கூழ் ஊத்துறேன் அவர் 6 வருஷமா கூழ் ஊத்திட்டு இருக்காரு, இங்க கேட்ட மாதிரி வெளில போய் கேட்டுடாதீங்க வேப்பிலை அடிச்சுடுவாங்க, போய் விபூதி வாங்கி பூசிக்கோங்க

நண்பர் : ங்கே

(இறைவா இந்த அன்புசெல்வன நான் பார்த்துகொள்கிறேன் பக்கோடா குட்டி மணியிடமிருந்து காப்பாற்று #பசங்க)

Wednesday, 22 May 2013

வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு

இரண்டு மாதத்திற்கு முன்... முதல் முதலாக சம்பளம் வந்த விஷயத்தை அப்பாவிடம் கூறினேன், அவரோ “ரொம்ப சந்தோஷம்மா பணத்தை சிக்கனமா செலவு பண்ணனும்”என்றார். கார்பரேட் கம்பெனி வேலை,முதல் சம்பளம் வேற மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு, சரி முதல் சம்பளம் வாங்கியிருக்கோம் அப்பா அம்மாவுக்கு துணி எடுக்கணும் அப்புறம்..ன்னு யோசிச்சு ஒரு சின்ன லிஸ்ட் போட்டேன். பிறகு எனக்கும் ஏதாவது வாங்கனும்ன்னு யோசிச்சு வைத்தேன். ...

அந்த வார கடைசியில் சக அலுவலக தோழி என்னிடம் வந்து ஒரு பிரபல பிராண்டட் காலணி கம்பெனி 50% முதல் 60% வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறார்கள் ஹேன்ட் பேக் கூட விற்ப்பனைக்கு இருக்கும், பிராண்டட் பொருட்களை உபயோகித்து பழகு நல்லா இருக்கும் என கூறினாள். சக அலுவலர்கள் அனைவரும் அங்கே செல்வதாக கூறி என்னையும் அழைத்து சென்றாள் (ஆம் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த கம்பெனி பிராண்டட் பொருட்கள் விலை அதிகம்தான்) அங்கு சென்றதும்தான் தெரிந்தது ஆயிரங்களில் விற்கப்படும் பொருட்கள் சில நூறுகளில் கிடைப்பது. நாமும் ஒரு காலணி வாங்கலாம் என நினைத்து பார்த்துகொண்டிருந்தேன், பிடித்தமான ஒரு ஜோடி காலணியின் உண்மையான விலையை பார்த்தது அதிர்ந்தேன்( நான் இதுவரைக்கு எடுத்த காலணியின் அதிகபட்ச விலையை விட ஐந்து மடங்கு அதிகம்) 60% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது என நானும் என் தோழியும் வாங்கினோம்.(பணத்தையும் சிக்கனமாக செலவு செய்தாயிற்று அதே நேரம் பிராண்டட் காலணியும் வாங்கியாயிற்று என ரொம்ப புத்திசாலித்தனமாக நினைத்துகொண்டேன்)

இரண்டு வாரங்களுக்கு பின்.., அன்று எனக்கு லேசாக முதுகுவலியுடன் சேர்ந்து கால்வலியும் இருந்தது ஒருவேளை அலுவலகத்தில் அமர்ந்தே இருப்பதால் இருக்கும் என நினைத்து வலி நிவாரணி கிரீம் வாங்கி உபயோகித்து அந்த வாரம் சாமளிதேன் பின் வலி அதிகமானதும் என் தோழியிடம் கூறினேன் அவளோ “சேம் பிளட்” என்றாள் நக்கலாக (பாவம் ஒரு வாரமாக அவளும் போராடியிருக்கிறாள்) “சரி சாயங்காலம் அருகில் இருக்கும் டாக்டரிடம் செல்லலாம்” என கூற அவளோ மறுத்து ஊரில் மிகபெரிய நெட்வொர்க் மருத்துவமனைக்கு கூட்டி சென்றாள் (ஹே..வீ ஆர் கார்பரேட் பீப்புள் யா என்பது போல தோன்றியது) அங்கு சென்றதும் 3 வகையான எக்ஸ்ரே (X-Ray) எடுக்க சொன்னார்கள், டாக்டர் எக்ஸ்ரேயில் இருவருக்கும் எந்த பிரச்சனை இல்லையே என கூறி சில வலி நிவாரணி மாத்திரைகளை எழுதி கொடுத்தார். அப்பாடா மருத்துவரிடம் சென்று மாத்திரை வாங்கி சாபிட்டாயாயிற்று நாளை முதல் வலி இருக்காது என நினைத்து தூங்கினேன்.

காலை கண் விழித்தால் வலி அப்படியே இருந்தது(முடியல).அன்று மாலை அருகில் உள்ள பிசியோதெரபிஸ்ட்டிடம் சென்று நடந்ததை கூறினேன் அவர் “சமீபத்தில் காலணியை மாற்றினீர்களா?” என கேட்டார் (அந்த ஆஃபர்ல வாங்குறப்போ பார்த்திருப்பாங்களோ என நினைத்தேன்) “ஆம்” என் கூறினேன் பின் காலணியை பார்த்துவிட்டு “அளவு சற்று குறைவாக இருக்கிறது, சரியாக குதியங்காலை ஊன்றி நடக்க முடியாத காரணத்தால்தான் அந்த வலி ஏற்ப்பட்டுள்ளது. சரியான அளவுள்ள காலணியை பயன்படுத்துங்கள்” என கூறினார்.

அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது மருத்துவத்திற்கு செய்த செலவிற்கு பதிலாக (3 X-Ray + டாக்டர் ஃபீஸ்) தள்ளுபடி இல்லாமலே அந்த குறிப்பிட்ட பிராண்டட் காலணி 3 ஜோடி வாங்கியிருக்கலாம், மேலும் “பிரபல பிராண்டட் பொருட்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறதென்றால் கண்டிப்பாக அதில் ஏதாவது குறை இருக்கும், சிக்கனம் என்ற பெயரில் சரியான பொருளை வாங்காவிட்டால் இப்படி வீண் செலவு ஏற்படுவதுடன் உடல் நலத்திற்கும் கேடு என நினைத்தேன்”

இதைதான் பெரியவர்கள் “வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு” என கூறினார்கள்

Tuesday, 21 May 2013

உதவி செய்பவர் மனிதன், கற்றுகொடுப்பவர் பெரிய மனிதன்

அது ஒரு பிரபல தனியார் வங்கியின் கிளை, காலை பதினோரு மணி, வியாபார நேரத்தில வாடிக்கையாளர்களும் வங்கி அலுவலர்களும் மிகவும் பரபரப்பாக இருந்தனர்(தனியார் வங்கி அதான் அலுவலர்கள் சுறுசுறுப்பாக இருந்தாங்க).நான் எனது சம்பள கணக்கை துவங்குவது குறித்து மேலாளரிடம் பேச சென்றிருந்தேன். அவரோ “பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கணக்கு துவங்க மினிமம் பேலன்ஸ் 1000 செலுத்தி விடுங்க” என கூறினார். சரி என்று வெளியே வந்தேன்.

“சம்பள கணக்கிற்கு மினிமம் பேலன்ஸ் எதுவும் வைக்க தேவையில்லை”யென அந்த வங்கி மார்கெட்டிங் அலுவலர் தெரிவித்திருந்தார் (எங்கிருந்தோ ஒரு பாட்டு எனக்கு கேட்டுச்சு “கழுத்துல டை,கையில பை,வாயில பொய்) சரி அவர் வரட்டும் பேசி பார்க்கலாம்ன்னு காத்திருந்தேன்.(மினிமம் பேலன்ஸ் 1000 கூட வைக்க முடியலைன்னா உனக்கு எதுக்கு வங்கி கணக்குன்னு உங்க மைன்ட் வாய்ஸ்ல நினைக்கிறது எனக்கு கேட்கிறது) அப்பொழுது அங்கே இரண்டு மாணவர்கள் கையில் ஒரு படிவத்தை வைத்துகொண்டு அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தனர், அது டிமாண்ட் டிராஃப்ட் எடுப்பதற்க்கான படிவம், அங்கே “MAY I HELP YOU” என எழுதி வைக்கப்பட்ட கேபினில் இருந்தவர் சக அலுவலகருக்கு ஏதோ உதவி செய்துகொண்டிருந்தார், மாணவர்கள் ஒரு நடுத்தர வயதுடைய நபரிடம் சென்று இஞ்சினியரிங் கல்லூரி விண்ணப்பத்திற்காக இந்த டிமாண்ட் டிராஃப்ட் படிவத்தை பூர்த்தி செய்து தாருங்கள்“ என்றார்கள் உடனே அவரும் வாங்கி படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து சென்றுவிட்டார்.

உடனே அவர்கள் பூர்த்தி செய்த படிவத்தை அங்குள்ள கவுண்ட்டரில் கொடுத்த போது அங்கிருந்த அலுவலர் வாங்கி அதை இரண்டு மூன்று முறை படிவத்தை பார்த்தார், பின் அதில் பிழை இருப்பதாக கூறி (நக்கீரன் மாதிரி என்ன பிழை கண்டாரோ தெரியலை) வேறு படிவம் பூர்த்தி செய்து தரும்படி கேட்டார். மாணவர்களோ செய்வதறியாது நின்றனர் மறுபடியும் புது படிவத்தை எடுத்து கொண்டு பூர்த்தி செய்து கொடுக்க யாராவது வருவார்களா என எதிர்பார்த்தனர்.அந்நேரத்தில் அங்கு ஒரு வந்த 75 வயதுடைய முதியவரிடம் படிவத்தை பூர்த்தி செய்து தர சொன்னார்கள்.அவரோ அவர்களை பார்த்து சிரித்தபடி “நான் பூர்த்தி செய்து தருவது மிக சுலபம் நான் பூர்த்தி செய்து தந்துவிட்டால் நீங்க எப்பொழுது பூர்த்தி செய்ய கற்றுக்கொள்வது?” என கூறி அவர் உதவி செய்ய அந்த மாணவர்கள் படிவத்தை பூர்த்தி செய்தார்கள். இனி இது அவர்களுக்கு எப்போது மறக்காது என நினைத்து கொண்டேன்.

இதிலிருந்து என்ன தெரியுதுன்னா “உதவி செய்பவர் மனிதன், கற்றுகொடுப்பவர் பெரிய மனிதன்” ஆகவே இதுபோல “உதவி செய்யும்போது கற்றுக்கொடுத்து பெரிய மனிதனாக வேண்டும்”

பெற்றோர்களுக்காக

வேலைக்கு சென்ற பிறகு முதன் முதலாக விடுமுறைக்கு நான் வீட்டிற்கு வந்திருந்த ஞாயிற்றுகிழமை அது, மாலை ஒரு 6 மணியளவில் அப்பாவின் நெருங்கிய நண்பர் வந்திருந்தார்,இருவரின் நட்பும் பள்ளி காலத்திலிருந்து இன்று வரை தொடர்கிறது. இருவர் வீட்டிலும் எந்த விஷேசமானாலும் ஒருவரையொருவர் கலந்து ஆலோசிக்காமல் செய்வது கிடையாது.அவருக்கு ஒரே பையன் BE-CSC முடித்து விட்டு படிப்பிற்கு சம்பந்தமே இல்லாத தானியங்களை எக்ஸ்போர்ட் செய்யும் நிறுவனத்தில் தென்னிந்திய விற்பனை மேலாளராக வேலை செய்து கொண்டிருக்கிறார்.

அவர் வந்ததும் அப்பா என்னிடம் “அம்மா சித்தப்பா வந்திருக்கார் பாரு தண்ணீர் கொண்டுவா, அப்படியே டீ போட்டு கொண்டுவாம்மா” என்றார் நான் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தேன். சித்தப்பா என்னிடம் “வேலை எப்படிமா?பிடிச்சிருக்கா? எப்போ டிரெயினிங் முடியும்?” என விசாரித்தார். நான் “வேலை நல்லா இருக்குங்க சித்தப்பா பிடிச்சிருக்கு, இன்னும் நாலு மாதத்துல முடிந்துவிடும்” என்றேன் பின் “சித்தி எப்படி இருக்காங்க, அண்ணா எப்போ ஊருக்கு வந்தாங்க? என்றேன். “நல்லா இருக்காங்கம்மா, தம்பி (பெரும்பாலும் எங்க ஊரில் மகனை பற்றி மற்றவர்களிடம் கூறும்பொழுது தம்பி என்றே அழைப்பார்கள்) படிப்புக்காக வாங்கின லோன் இன்னும் இருக்குமா அது விஷயமா போன வாரம்தான் வந்திருந்தான்” என்றார் “சரி” என கூறி டீ போட சமையலறைக்குள் சென்றேன்.

சமையலறையில் டீ வைத்துக்கொண்டே அவர்கள் உரையாடல்களை கவனித்தேன் ( சத்தியமா ஒட்டு கேட்கலைங்க) அப்பா அவரிடம் “சொல்லு மணி என்ன விஷயம் தம்பிக்கு ஏதாவது ஜாதகம் வந்துச்சா? அந்த லோன் விஷயம் என்ன ஆச்சு இன்னும் எவ்வளவு கட்ட வேண்டி இருக்கு என்றார்” அதற்க்கு அவர் “ஜாதகம் எல்லாம் வரலை,சும்மாதான் பாப்பா (என்னையத்தான்) வந்திருக்குன்னு நங்கை (அண்ணி) சொல்லுச்சு அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்” என்றவர் தொடர்ந்து “அவன் படிப்பு செலவுக்காக 5 லட்சம் பேங்க் கடன் வாங்கினதுல இன்னும் 3 லட்சம் இருக்கு இப்பத்தான் அவனுக்கு சம்பளம் ஜாஸ்தி பண்ணியிருக்காங்க இன்னும் ரெண்டு வருசத்துல முடிஞ்சிடும், என்றார், அதற்க்கு அப்பா “அப்புறம் என்ன ரெண்டு வருசமங்கிறது சீக்கிரம் போய்டும் விடு, அவனுக்கு பொண்ணு பார்க்கிற வேலையை பாரு” அவரோ “எங்க அவன்தான் லோன் கட்டி முடிச்சதுக்கு அப்புறம்தான் கல்யாணத்தை பற்றி பேச்சுன்னு ஒரே முடிவா சொல்லிட்டான்” என்றவர் “நீயெல்லாம் பாரு பேங்க்ல லோன் வாங்காமலே படிக்க வைச்சு வேலைக்கு அனுப்பிட்ட” என்றார்.

அப்பா “நான் ஏன் லோன் வாங்கலைன்னா நாளைக்கு என் பொண்ணு வந்து என்கிட்டே ‘உங்க பொண்ணு நான் எனக்காக இல்லாட்டியும் என் படிப்புக்காக கூட உங்களால திட்டமிட்டு சேமிச்சுவைக்க முடியாதா?’ ன்னு கேட்டா நான் பதில் சொல்லட்டும்”என்றார். அவரோ “ஆமாம், கண்டிப்பா உன் பொண்ணு கேட்பா” என்றார்.

அப்பா “அதுனாலதான் அவ சின்ன வயசா இருக்கிறப்ப இருந்தே அவ படிப்புக்காக சேமிச்சு வைக்க ஆரம்பிச்சேன்” என்றார் அவர் என் படிப்புக்காக லோன் வாங்கியிருந்தால் நான் கேட்பேன் என அவர் நினைத்தை கண்டிப்பா கேட்டிருப்பேன்.

அதுனால அப்பாக்களே எங்களுக்காக இல்லாடியும் எங்க படிப்புக்காக திட்டமிட்டு சேமியுங்க.

ஒப்பீடு

சென்ற வாரம் ஒரு குடும்பத்துடன் ஹோட்டலுக்கு சென்றிருந்தோம், தேவையான உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம், அப்போது அங்கே ஒரு 70 வயது மதிப்புடைய பெரியவர் வந்து அமர்ந்ததை கவனித்துகொண்டிருந்தேன், அருகில் சென்ற சர்வர் மெனு கார்டை எடுத்து நீட்டினார்.

வாங்கி பார்த்துவிட்டு அருகில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவரிடம் மெனு கார்டை நீட்டி படித்து சொல்ல கேட்டார்.
அதை வாங்கி பார்த்துவிட்டு திருப்பி கொடுத்த அந்த நபர். "உங்களைப் போலவே எனக்கும் படிக்கத் தெரியாது" என்று கூறி எழுந்து சென்றார்.

இதை கவனித்த நான் அருகில் சென்று படித்து கூறினேன், உடனே அவர் ஆங்கிலத்தில் "தன்னுடைய மூக்கு கண்ணாடியை வீட்டில் வைத்துவிட்டு வந்துதால் படிக்க இயலவில்லை" என்றும் தான் ஒரு ஓய்வுபெற்ற தலைமை கல்வி அதிகாரி எனவும் கூறினார்.

இப்படிதான் ஒரு சிலர் தன்னுடைய குறையை ஒப்புக்கொள்ளாமல் அடுத்தவருடைய குறையுடன் ஒப்பிட்டு கூறுவார்கள்.